Last Updated : 14 Jun, 2021 03:12 AM

 

Published : 14 Jun 2021 03:12 AM
Last Updated : 14 Jun 2021 03:12 AM

நொய்டாவில் ரூ.20 கோடி தங்கம், ரூ.10 கோடி கறுப்புப் பணம் திருடிய 6 பேர் கைது: தமிழக ஐபிஎஸ் அதிகாரிக்கு முதல்வர் ஆதித்யநாத் பரிசு

டெல்லிக்கு அருகில் நொய் டாவின் சூரஜ்பூர் காவல் நிலைய பகுதியில் அமைந்த சில்வர் சிட்டி எனும் பெயரில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் 500 வீடுகள் உள்ளன. இதன் ஒரு பூட்டிய வீட்டில்கடந்த வருடம் ஆகஸ்டில் ரூ.20கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள்,ரூ.10 கோடி பணம் திருடப்பட்டன. இவை நொய்டாவின் செக்டர்39-ல் சலார்பூர் கிராமத்தின் 10 பேர்கொண்ட கும்பலால் திருடப்பட்டுள்ளது. பறிகொடுத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிஸ்லே பாண்டே புகார் அளிக்காததால் அது வெளியில் தெரியவில்லை. அவை அத்தனையும் கறுப்புப்பணம் என்பதால் புகார் அளிக்கவில்லை.

இந்நிலையில், திருடியவர்கள் அவற்றை பங்கு போட்டுக் கொண்டு சொத்துக்களை வாங்கியும் விலை உயர்ந்த வாகனங்களில் வலம் வந்தும், ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கியும் வந்துள்ளனர். இது கிராமவாசிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்தத் தகவல் நொய்டா காவல் துறை துணைஆணையர் சு.ராஜேஷ் கவனத்துக்கு சென்றது. கோவில்பட்டியை சேர்ந்த தமிழரான இவர் அதற்காகஒரு குழு அமைத்து விசாரித் துள்ளார்.

இக்குழு, சலார்பூரை சேர்ந்த ராஜன் பாட்டி, அருண் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்துள்ளது. இவர்களது புறவாசல், மாட்டுத் தொழுவம் போன்ற இடங்களில் பதுக்கி வைக்கப்பட்ட 10 கிலோ தங்கக்கட்டிகள், 3 கிலோ தங்க நகைகள் ரூ.57 லட்சம் பணம், ரூ.1 கோடி நிலப்பத்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.8.25 கோடி ஆகும். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல அதிர்ச்சியான தகவல் கள் கிடைத்துள்ளன.

இதன்படி, திருட்டு நடந்த வீட்டை வாடகைக்கு எடுத்தவரான கிஸ்லே பாண்டே, வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார். இவர் தனது தந்தையான ராம் மணி பாண்டேவுடன் 8 நிறுவனங்கள் நடத்தியுள்ளார். இவற்றை வைத்துசெய்த மோசடி, மிரட்டல், உள்ளிட்ட பல வழக்குகள், தீர்ப்புகள் விரைவில் வழங்கும் நிலையில் உள்ளன.

இவற்றில் தலா 2 வழக்குகள் டெல்லி பொருளாதாரப் பிரிவு மற்றும் சிபிஐ விசாரித்தவை. பிரபல நிறுவனங்கள் மீது பொதுநல வழக்குகள் தொடுத்து மிரட்டி பணம் பறிப்பதும் இவர்களது வேலையாக இருந்துள்ளது. இதில், மும்பையின் பிரபல நிதிநிறுவனம் மீது வழக்கு தொடுப்பதாக மிரட்டியதில் கைது செய்யப்பட்ட கிஸ்லே 11 மாத சிறைக்கு பின் ஜாமீனில் உள்ளார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் துணை ஆணையர் சு.ராஜேஷ் கூறும்போது, ‘‘பட்டப் பகலில் நடந்த இத்திருட்டிற்கு கிஸ்லேவிடம் பணியாற்றியவர் உதவியாக இருந்துள்ளார். முக்கிய குற்றவாளி கோபால்சிங் உள்ளிட்ட 4 பேர் கிடைத்தால் திருடப்பட்டவை முழுமையாக பறிமுதலாகும்’’ எனத் தெரிவித்தார்.

சமீப ஆண்டுகளாக இந்தஅளவுக்கு மதிப்பு வாய்ந்த பொருட்கள் உ.பி. காவல்துறையினரிடம் சிக்கியதில்லை. எனவே, இந்த வழக்கை புலனாய்வு செய்த தமிழரான துணை ஆணையர் சு.ராஜேஷை பாராட்டி அவரது குழுவிற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ரூ.2 லட்சம் பரிசு அறிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், நொய்டா காவல்துறை ஆணையரும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x