Published : 14 Jun 2021 03:13 AM
Last Updated : 14 Jun 2021 03:13 AM
அரியலூர்: அரியலூரை அடுத்த ராவுத்தன்பட்டி பிரிவு சாலையில் டீ கடை நடத்தி வருபவர் முருகேசன்(45). இவரது கடை அருகே மழைநீர் தேங்கியதால் ஏற்பட்ட சேற்றில் அவ்வழியே நேற்று முன்தினம் ஒரு பெண் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் சிக்கியது.
அந்த வாகனத்தை மீட்க முருகேசன் முயன்றுள்ளார். அப்போது, அவ்வழியே வந்த சிமென்ட் ஆலைக்கு இயக்கப்படும் டிப்பர் லாரி முருகேசன் மீது வேகமாக மோதியது. இதில், முருகேசன் படுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் கிடந்தார். இதைக்கண்ட முருகேசன் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும். சிமென்ட் ஆலைகளுக்கு இயக்கப்படும் லாரிகள் வேகமாகச் சென்று அடிக்கடி விபத்தை ஏற்படுத்தி வருவதால், அதை காவல் துறை கண்காணிக்க வேண்டும் எனக் கூறி மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த மாவட்ட எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். படுகாயமடைந்த முருகேசன் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கயர்லாபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT