Published : 13 Jun 2021 03:11 AM
Last Updated : 13 Jun 2021 03:11 AM
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலின் 2-வது அலை கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் உச்சக் கட்டத்தை எட்டியது. அப்போது தினமும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகினர். அதன்பின், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு கடும் நடவடிக்கைகளால் வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்குக் கீழ் குறைந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 84,332 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த70 நாட்களுக்குப் பின் பதிவானமிகக் குறைந்த எண்ணிக்கையாகும். எனினும், உயிரிழப்பு 4,002 ஆக உள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 67,081 ஆக உயர்ந் துள்ளது.
நாட்டில் கரோனா சிகிச்சையில் குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.நேற்று மட்டும் ஒரு லட்சத்து 21,311 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 79 லட்சத்து 11,384 ஆக உயர்ந்துள்ளது.
தினசரி கரோனா பாதிப்பு 4.39 சதவீதமாக உள்ளது. இதுவரை 37.62 கோடி பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கி இதுவரை 24.96 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புள்ளிவிவரம் வெளி யிட்டுள்ளது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT