Published : 13 Jun 2021 03:12 AM
Last Updated : 13 Jun 2021 03:12 AM
பெண் காவலரின் பாலியல் குற்றச்சாட்டு புகாரைத் தொடர்ந்து, நீலகிரி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சார்லஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக (கூடுதல் எஸ்பி) பணியாற்றி வருபவர் சார்லஸ். இவர், இதற்கு முன்னர் ஈரோடு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் எஸ்பியாக பணியாற்றி வந்தார். அப்போது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அங்கு பணியாற்றிய பெண் காவலர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக அப்போதைய கோவை சரக டிஐஜி, ஐஜி உள்ளிட்டோர் விசாரித்தனர். புகார் காவல்துறை இயக்குநர் (டிஜிபி)கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து, கூடுதல் எஸ்பி சார்லஸ், ஈரோட்டில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் எஸ்பியாக மாற்றப்பட்டார். இவர் மீதான புகார் தொடர்ந்து விசாரணையில் இருந்து வந்தது. விசாரணை அறிக்கை மேற்குமண்டல காவல்துறை அதிகாரிகள் மூலம், காவல்துறை இயக்குநர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து கூடுதல் எஸ்பி சார்லஸை பணியிடை நீக்கம் செய்து, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு, கூடுதல் எஸ்பிசார்லஸிடம் நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது. மேலும், தற்போது பணிபுரியும் இடத்திலேயே கூடுதல்எஸ்பி சார்லஸ் தங்கியிருக்க வேண்டும். அரசு அனுமதியில்லாமல், வேறு எங்கும் செல்லக் கூடாது எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT