Published : 13 Jun 2021 03:12 AM
Last Updated : 13 Jun 2021 03:12 AM
திருப்பூர்: திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிறுவனங்களில் ஆடைகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகள்,வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதை நம்பி 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். திருப்பூரில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததால், பனியன் நிறுவனங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. கடந்த வாரம் 10 %தொழிலாளர்களுடன் பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்துக்கு மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
கரோனா பாதிப்பு அதிகம் மற்றும் குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி கோவை, திருப்பூர், சேலம் உட்பட 11 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் சலுகைகள் மற்றும் தளர்வுகள் அதிகமாக வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும்,பனியன் ஏற்றுமதி நிறுவனங்களில் கூடுதலாக தொழிலாளர்களை பணியமர்த்த அனுமதி வழங்க வேண்டுமென,திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில் துறையினர் வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில், பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்களில் 25 சதவீத தொழிலாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதனால் தொழில்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT