Published : 13 Jun 2021 03:13 AM
Last Updated : 13 Jun 2021 03:13 AM

திருச்சி காந்தி மார்க்கெட்டில் ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் அழிப்பு :

திருச்சி: திருச்சி காந்தி மார்க்கெட்டில் மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைப்பதற்காக ரசாயனம் பயன்படுத்தப்படுவதாக மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து உணவுப் பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ஆர்.ரமேஷ்பாபு தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் முத்துராஜா, வசந்த், ஸ்டாலின், ரங்கநாதன், ஜஸ்டின், அன்புச்செல்வன், வடிவேலு, சண்முகசுந்தரம் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று திடீர் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் காந்தி மார்க்கெட்டில் உள்ள 10 மாம்பழ குடோன்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் மாம்பழங்களை செயற்கையான முறையில் பழுக்க வைக்க ரசாயனங்கள் தெளிக்கப்பட்ட 4 டன் மாம்பழங்களை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். அவற்றை அரியமங்கலத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் பள்ளம் தோண்டி கொட்டி அழித்தனர். மேலும், உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணயச் சட்டம் 2006-ன்படி மூன்று உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு, உணவுப் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் ஆர். ரமேஷ்பாபு கூறும்போது, ‘‘பழங்களை செயற்கையாக பழுக்க வைக்க ரசாயனம் தெளிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்று கலப்பட உணவுகள் தொடர்பாக பொதுமக்கள் 9585959595, 9944959595, 9444042322 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x