Published : 13 Jun 2021 03:13 AM
Last Updated : 13 Jun 2021 03:13 AM

கரோனா தொற்றால் உயிரிழந்த - முன்கள பணியாளர்களின் நினைவாக அடர்வனம் : மரக்கன்று நட்டு, பணியை தொடங்கிவைத்த அமைச்சர்

கரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் நினைவாக, விவசாய அமைப்பு சார்பில் 18 ஏக்கர் பரப்பளவில் அடர்வனம் உருவாக்கும் பணியை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று மரக்கன்றுகளை நட்டு, தொடங்கிவைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் போராவூரணி அருகே நாடியம் ஊராட்சியில், கிழக்கு கடற்சாலையில் உள்ள பிள்ளையார் திடல் பகுதியில் 42 ஏக்கர் அரசு நிலத்தில் சீமைக் கருவேல மரங்கள் மண்டியிருந்தன. இதையடுத்து, ‘கைஃபா’ எனும் கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்க நிர்வாகிகள், அரசிடம் உரிய அனுமதி பெற்று, கடந்த 3 மாதங்களாக சீமைக் கருவேல மரங்களை அகற்றி, அந்த இடத்தை சுத்தம் செய்தனர்.

தொடர்ந்து, அந்த இடத்தில் கரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் நினைவாக ‘கைஃபா’ அமைப்பு மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து, முதற்கட்டமாக 18 ஏக்கரில் மரக்கன்றுகளை நட்டு, அடர் வனம் உருவாக்குவதற்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமை வகித்து, மரக்கன்றுகளை நட்டு, பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

தமிழகத்தில் 14 மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு கடற்கரை யின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், கடற்கரை ஓரங்களில், எந்தெந்த பகுதிகளில் அதிகளவில் மரக்கன்றுகளை நட முடியும் என்பது குறித்து ஆராய்ந்து, தன்னார்வலர்களின் உதவியுடன் மரக்கன்றுகளை நட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக, கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கத்தினர், இப்பகுதியில் மரக்கன்றுகளை நடும் பணியைத் தொடங்கி உள்ளனர். இதில், கரோனா காலத்தில் மக்களைக் காக்க முன்களப் பணியாளராக பணியாற்றி உயிரிழந்தவர்களின் நினைவைப் போற்றும் வகையில், அவர்களின் பெயர்களில் மரக்கன்றுகளை நட்டு, அடர்வனமாக உருவாக்க உள்ளனர். இதுபோன்ற செயல்கள் தமிழகம் முழுவதும் தொடரும்.

மேலும், கடலில் கழிவுகள் கலப்பதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மிகவும் சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலமான மனோராவை மேம்படுத்துவது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார்.

இந்நிகழ்ச்சியில், பேராவூரணி எம்எல்ஏ என்.அசோக்குமார், சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழுத் தலைவர் முத்துமாணிக்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான்கென்னடி, செல்வேந்திரன், காவல் ஆய்வாளர்(பொ) ஜெய மோகன், ஊராட்சி மன்றத் தலைவர் பிரேம்செல்வன், தஞ் சாவூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் கைஃபா நிர்வாகிகள் கார்த்திகேயன், நிமல்ராகவன், நவீன்ஆனந்தன், பிரபாகரன், தங்க கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x