Published : 12 Jun 2021 07:00 AM
Last Updated : 12 Jun 2021 07:00 AM

உரிமையை பாதுகாத்து கருத்துடன் பராமரிக்க வேண்டும் - குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம் : பொதுமக்கள் ஒத்துழைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

குழந்தைகளின் உரிமைகளை பாதுகாத்து, அவர்களை கருத்துடன் பராமரிக்க வேண்டியது தமிழக மக்களின் கடமையாகும். தமிழகத்தை குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

இந்த பூமியில் பிறந்த குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமானது வாழும் உரிமை, பாதுகாப்பு மற்றும் கல்வி உரிமைகளாகும். இந்த உரிமைகளை அவர்களிடம் இருந்து பறிப்பது இயற்கைநியதிக்கும், சமூக நீதிக்கும் எதிரானது என்பதை கருத்தில் கொண்டு,குழந்தைகள் நலன் பேணும் நெறியில் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை வளர்க்கும் நாளாக உலகெங்கும் ஜூன் 12-ம் தேதி, குழந்தைகளின் குழந்தைப் பருவத்தை சீர்கெடாமல் இருக்க விழிப்புணர்வு விதைக்கப்படுகிறது.

நாளைய நவீன உலகை உருவாக்கும் சிறந்த சிற்பிகள் நம் குழந்தைச் செல்வங்கள். ஆற்றல் மிக்க அவர்களின் திறமைகளைக் கண்டறிந்து அந்த திறமைகளை மேம்படுத்தி, அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்களை கருத்துடன் பராமரிக்க வேண்டியது தமிழக மக்களின் கடமையாகும். கல்விச் செல்வம் பெற வேண்டிய சமயத்தில், கடுமையான வேலைச் சுமைகளை சுமந்து நிற்கும் பிஞ்சுகுழந்தைகளை, குழந்தை தொழிலாளர் முறை என்ற கொடுமையான வன்முறையில் இருந்து விடுவித்து, அவர்களுக்கு இனிமையான குழந்தைப் பருவத்தையும், முறையான கல்வியையும் உறுதி செய்வதே தமிழக அரசின் குறிக்கோளாகும்.

அக்குறிக்கோளை அடையும் பொருட்டு அனைத்து வகையான தொழிலகங்களில் இருந்தும் குழந்தை தொழிலாளர் முறையைமுற்றிலும் அகற்றி, ‘குழந்தை தொழிலாளர் இல்லா மாநிலம்’ என்றநிலையை தமிழகத்தில் கொண்டுவர, அனைத்து ஆக்கப்பூர்வமான செயல் திட்டத்தையும் துரிதமாக நடைமுறைப்படுத்த புதிதாக பொறுப்பேற்றுள்ள இந்த அரசு உறுதிபூண்டுள்ளது.

குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றிடும் வகையில், பணியில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைகளை முறையாக பள்ளிகளில் சேர்த்து, அவர்களுக்குஅரசின் மூலம் சீருடைகள், பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், புத்தகபைகள், காலணிகள், கல்வி உபகரணங்கள், சத்தான மதிய உணவு, கட்டணமில்லா பேருந்து பயண அட்டை, உயர்கல்வி பயிலும்முன்னாள் குழந்தைத் தொழிலாளர்களுக்கு அவர்களின் கல்விக்காலம் முழுவதும் ரூ.500 வீதம் மாதாந்திர உதவித்தொகை வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

தற்போது மத்திய அரசால், 14வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டுமின்றி 18 வயது நிறைவடையாத வளரிளம் பருவத்தினரையும் அபாயகரமான தொழில்களில் அமர்த்தப்படுவதை முற்றிலும் தடை செய்து வெளியிடப்பட்ட சட்டதிருத்தத்தை அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தை குழந்தை தொழிலாளர்களற்ற மாநிலமாக மாற்ற தமிழக அரசுமேற்கொள்ளும் சீரிய முயற்சிகளுக்கு அரசு, அரசுசாரா நிறுவனங்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தொழிற்சங்கங்கள், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் தெரி வித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x