Published : 12 Jun 2021 07:01 AM
Last Updated : 12 Jun 2021 07:01 AM
உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, மாநில முதல்வர் ஆதித்யநாத் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்ட மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த சூழலில், முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது கட்சிக்கு உள்ளேயே அதிருப்தி எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
கரோனா பரவலை அவர் முறையாக கையாளவில்லை என பாஜக எம்எல்ஏக்கள் புகார் கூறுகின்றனர். மேலும், அவர் சார்ந்த தாக்குர் சமூகத்துக்கு ஆதரவாகவே அவரது செயல்பாடு இருப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
எனவே, சட்டப்பேரவைத் தேர்தலில் ஆதித்யநாத்தை முதல் வர் வேட்பாளராக அறிவிக்க கூடாது என கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதனிடையே, முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பிறந்த நாள் கடந்த வாரம் வந்தது. அப்போது அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதனால் பிரதமருக்கும், யோகி ஆதித்யநாத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக ஊடகங்களில் செய்திகள் அடிபட்டன.
இந்தப் பின்னணியில், டெல்லியில் சின தினங்களாக முகாமிட்டுள்ள உ.பி. முதல்வர் ஆதித்யநாத், நேற்று முன்தினம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைசந்தித்து 90 நிமிடங்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், பிரதமர் மோடியை முதல்வர் ஆதித்யநாத் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது. சட்டப் பேரவைத் தேர்தல், உட்கட்சி விவகாரங்கள், பாஜகவுக்கு ஜிதின் பிரசாதாவின் வருகை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதித்ததாக தெரிகிறது.
அதன் பிறகு, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவையும் ஆதித்யநாத் சந்தித்து பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT