Published : 12 Jun 2021 07:01 AM
Last Updated : 12 Jun 2021 07:01 AM

மீண்டும் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார் முகுல் ராய் :

பாஜக மூத்த தலைவர் முகுல் ராய் நேற்று மீண்டும் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார்.

மேற்குவங்க காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த முகுல் ராய், கடந்த 1998-ம் ஆண்டு திரிணமூல் காங்கிரஸ் தொடங்கியபோது அந்த கட்சியில் இணைந்தார். கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமாக இருந்த அவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் ரயில்வே அமைச்சராக பணியாற்றினார்.

கடந்த 2015-ம் ஆண்டில் சாரதா ஊழல் வழக்கில் முகுல் ராய் சிக்கினார். இதன்பிறகு பாஜக மூத்த தலைவர்களுடன் அவர் நெருக்கம் காட்டினார். கடந்த 2017 செப்டம்பரில் திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து திரிணமூலை சேர்ந்த 37 எம்எல்ஏக்கள் உட்பட 150-க்கும்மேற்பட்டோர் பாஜகவில் ஐக்கியமாகினர்.

அண்மையில் நடைபெற்ற மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியை தக்க வைத்து கொண்டது. இதன்பிறகு மாநிலம் முழுவதும் பாஜகவினருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாகமுன்னாள் திரிணமூல் காங்கிரஸாரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த பின்னணியில் முகுல் ராய் நேற்று பாஜகவில் இருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் மீண்டும் இணைந்தார். முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முகுல் ராயும், அவரது மகன் சுப்ரன்சு ராய், ஆதரவாளர்கள் திரிணமூலில் ஐக்கியமாகினர்.

நிகழ்ச்சியில் முதல்வர் மம்தாபேசும்போது, ‘‘நேர்மையானவர் கள், அமைதியானவர்கள், வெறுப்புஅரசியலில் ஈடுபாடு இல்லாதவர் கள் மீண்டும் திரிணமூல் காங்கிரஸில் இணைத்து கொள்ளப்படு வார்கள். பணத்துக்காக கட்சிக்கு துரோகம் செய்தவர்களை மீண்டும் சேர்க்க மாட்டோம். மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் மூலம் முகுல் ராய் மிரட்டப்பட்டுள்ளார். இதன்காரணமாக அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது’’ என்று தெரிவித்தார்.

முகுல் ராய் கூறும்போது, ‘‘நான் திரிணமூல் காங்கிரஸில் முறைப்படி இணைந்துள்ளேன். இன்றைய சூழ்நிலையில் பாஜகவில் யாரும் நிலைத்திருக்க விரும்ப மாட்டார்கள். வரும் நாட்களில் மேலும் பலர் திரிணமூலுக்கு திரும்புவார்கள். எனது தலைவர் மம்தா. தேசிய அளவில் மேற்குவங்கத்தை அவர் முன்னோடியாக வழிநடத்துவார்’’ என்று கூறினார்.

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் கிருஷ் ணாநகர் உத்தர் தொகுதியில் போட்டியிட்ட முகுல் ராய் வெற்றிபெற்றார். ஆனால் பாஜக வேட்பாளராக பிஜுபூர் தொகுதியில் களமிறங்கிய அவரது மகன் சுப்ரன்சு ராய் தோல்வியைத் தழுவினார். திரிணமூலில் இருந்து பாஜகவுக்கு மாறி போட்டியிட்ட பலரும் தோல்வியடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x