Published : 12 Jun 2021 07:01 AM
Last Updated : 12 Jun 2021 07:01 AM

அரசின் அனுமதியின்றி கரோனா நோய் தொற்றாளர்களுக்கு - சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனைக்கு 'சீல்' :

திருப்பூர்

திருப்பூர் 15 வேலம்பாளையம் சாமுண்டிபுரம் காந்தி நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சிகிச்சை எடுத்து வந்தனர். இரண்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அரசின் அனுமதியின்றி கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதாக, அப்பகுதியை சேர்ந்தவர்கள் தமிழக காவல்துறை உயர் அலுவலர்களுக்கு புகார் அளித்தனர்.

அதன்பேரில், சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் திருப்பூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் த.கி.பாக்கியலட்சுமி, காவல் மற்றும் வருவாய்த் துறையினர் நேற்று திடீர் ஆய்வு செய்தபோது, கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக வருவாய்த் துறையினர் கூறும்போது, "ஓய்வுபெற்ற மாநகராட்சி தலைமை மருத்துவரும், மகப்பேறு குழந்தைகள் நலம் மற்றும் பொதுநல மருத்துவருமான ஆர்.நீலாம்பாள், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் என்.ஜெகதீசன் ஆகியோர் இந்த மருத்துவமனையை நடத்தி வந்துள்ளனர். வயது மூப்பு காரணமாக மருத்துவமனையை அவர்கள் காலி செய்துவிட்டனர்.

அதன்பின்னர், தமிழ்நாடு மருத்துவமனை நிர்வாக சட்டம்1997-ன்படி மேற்கண்ட மருத்துவ தம்பதியிடம் சான்றிதழ் பெற்று, தற்போதுள்ளவர்கள் மருத்துவமனையை நடத்தி வந்துள்ளனர்" என்றனர்.

திருப்பூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் பணிகள்இணை இயக்குநர் த.கி.பாக்கியலட்சுமி கூறும்போது, "போலீஸாரிடம் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், மேற்கண்ட மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு உரிய அனுமதியின்றி, கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மேற்கண்ட மருத்துவமனையை தற்காலிகமாக மூடி 'சீல்' வைக்கப்பட்டது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x