Published : 12 Jun 2021 07:02 AM
Last Updated : 12 Jun 2021 07:02 AM

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் - பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் :

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக நேற்று காஞ்சிபுரம், காமராஜர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்/காஞ்சி/ செங்கை

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பழவேற்காடு, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவள்ளூர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், திருவள்ளூர் எம்.பி.ஜெயக்குமார், பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர், திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்று, மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நாகராஜன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் பத்மநாபன், வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்று, பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி முழக்கமிட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், பல்லாவரம், குரோம்பேட்டை, மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x