Last Updated : 12 Jun, 2021 07:02 AM

 

Published : 12 Jun 2021 07:02 AM
Last Updated : 12 Jun 2021 07:02 AM

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் முன்பே - கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர கடும் போட்டி : ஆன்லைனில் விவரங்களை பதிவு செய்யும் மாணவர்கள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டே பெரும்பாலான கல்லூரிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தினர். தற்போது, தேர்வாகும் மாணவர்கள் ஆன்லைனிலேயே கல்விக் கட்டணம் செலுத்தும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் கரோனா ஊரடங்கால் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஓரிரு வாரங்களில் மாணவர்கள் தேர்ச்சி அறிவிப்பு, மதிப்பெண் விவரங்களை பள்ளி கல்வித் துறை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அனைத்துக் கல்லூரிகளிலும் முதுகலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கி உள்ளனர். ஒரு சில தனியார், அரசு உதவி பெறும் கல்லூரி நிர்வாகங்கள் விருப்பமுள்ள மாணவர்கள் முதலில் ஆன்லைனில் பெயர், பாடப்பிரிவு விவரங்களை பதிவு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளதால், பலர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, விவரங்களை பதிவு செய்து வருகின்றனர். ஆனால், சில அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் அரசு கல்லூரிகளில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகே மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனியார் கல்லூரி முதல்வர் ஒருவர் கூறியதாவது: இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வின்றி மதிப்பெண் வழங்கப்படுகிறது. வழிகாட்டுக் குழு வழங்கும் ஆலோசனையின்படி, அந்தந்த பள்ளி வழங்கும் மதிப்பெண் அடிப்படையில் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெறும் என ஏற்கெனவே அரசு அறிவித்துள்ளது. ஒரு சில கல்லூரிகள், தங்களது கல்லூரிகளில் சேர விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து, மதிப்பெண்களை தவிர்த்து, பிற விவரங்களை பதிவிடலாம். மதிப்பெண் கிடைத்தபின், அதை பூர்த்தி செய்து, பிடிஎப் பைலாக அனுப்ப ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது. தேர்வு முடிவுக்கு முன்பே விரும்பிய பாடப்பிரிவுகளைத் தேர்வுசெய்து பதிவிடுகின்றனர். எப்படியும் மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை நடக்கும்.

கரோனாவால் கடைசி நேரத்தில் மாணவர் சேர்க்கையில் தாமதத்தை தவிர்க்க, முன்பே மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகளை சில கல்லூரிகள் தொடங்கி இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x