Published : 12 Jun 2021 07:03 AM
Last Updated : 12 Jun 2021 07:03 AM
"புதுச்சேரியில் அமைச்சரவை அமைக்கும் விவகாரத்தில் பாஜகவின் பணி முடிந்துவிட்டது. இனி முடிவை முதல்வர் ரங்கசாமி விரைவில் அறிவிப்பார்" என்று பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சட்டப்பேரவைத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் கோப்பு அனுப்பியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, கடந்த மே 7-ம் தேதி முதல்வராக பதவியேற்றார். முதல்வர் பொறுப்பேற்று ஒரு மாதத்தை கடந்த நிலையிலும் புதிய அரசில் அமைச்சர்கள் யார் என அறிவிக்கப்படவில்லை. அமைச்சரவையில் கூடுதல் இடங்களைப் பெறுவதில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக இடையே தொடர்ந்து இழுபறி நீடித்தது.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து பாஜகவுக்கு பேரவைத் தலைவர்மற்றும் 2 அமைச்சர் பதவிகளைத் தர முதல்வர் ரங்கசாமி சம்மதித்தார். இதைத் தொடர்ந்து புதியஅமைச்சர்கள் குறித்த அதிகாரப்பூர்வ கடிதத்தை கட்சித் தலைமை அனுமதியுடன் அனுப்புவதாக புதுச்சேரிக்கான பாஜக மேலிட பொறுப்பாளர் ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. தெரிவித்திருந்தார்.
வரும் 14-ம் தேதி வளர்பிறை முகூர்த்த நாள் என்பதால் அன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கான எந்த ஏற்பாடுகளும் இதுவரைதொடங்கவில்லை. இந்நிலையில், புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் சட்டப்பேரவை பாஜக கட்சித்தலைவர் நமச்சிவாயம் உட்பட 6 எம்எல்ஏக்கள், நியமன எம்எல்ஏக்கள் இருவர், ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் இருவர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். ஒரு நியமன எம்எல்ஏவும், ஒரு சுயேச்சை எம்எல்ஏவும் கரோனா காரணமாக பங்கேற்கவில்லை. கூட்டத்தில் அமைச்சரவை உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் சாமிநாதன் கூறியதாவது:
உலக யோகா தினத்தையொட்டி 2 நாள் யோகா முகாம் நடத்த முடிவு செய்துள்ளோம். ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் புதுச்சேரி மாநிலத்தில் 100 சதவீதம் தடுப்பூசி போடப்படும். இதற்காக முதலில் விழிப்புணர்வு ஏற்படுத்தி 300 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்த உள்ளோம்.
புதுச்சேரியில் அமைச்சரவை அமைக்கும் விஷயத்தில் பாஜகவின் பணி முடிந்துவிட்டது. பாஜக தேசியக் கட்சி என்பதால் மாநிலக் கட்சிபோல் முடிவு எடுக்க முடியாது. அமைச்சரவை அமைக்கும் முடிவை இனி முதல்வர் ரங்கசாமிதான் அறிவிக்க வேண்டும்.
பதவியேற்றவுடன் முதல்வர் கரோனாவால் பாதிக்கப்பட்டதால்தான் இந்த தாமதம் ஏற்பட்டது. எங்களுக்குள் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துவிட்டது. கூட்டணியில் பிரச்சினை, குழப்பம் ஏதுமில்லை. முதல்வர் விரைவில் அமைச்சர்களை அறிவித்து, அவர்கள் பதவியேற்பார்கள். பாஜக எம்எல்ஏ விரைவில் பேரவைத் தலைவராவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆளுநர் மாளிகைக்கு கோப்பு
இதுகுறித்து என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் விசாரித்தபோது, ‘‘அமைச்சரவை தொடர்பாக வரும் 14-ம்தேதி முதல்வர் அறிவிப்பை வெளியிடுவார். பாஜக மேலிடம் முதல்வரிடம் பேசியதன் அடிப்படையில் வரும் 16-ம் தேதி சட்டப்பேரவைத் தலைவர் தேர்தல் நடத்த அனுமதிக்கக் கோரி ஆளுநர் மாளிகைக்கு கோப்பை முதல்வர் அனுப்பியுள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் பாஜக எம்எல்ஏ செல்வம், பேரவைத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்‘‘ என்று தெரிவித்தனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT