Published : 11 Jun 2021 03:13 AM
Last Updated : 11 Jun 2021 03:13 AM

தாம்பரம் அருகே உள்ள அரசு பள்ளியில் - ரூ.42 லட்சத்தில் சீரமைப்பு பணிகள் தொடக்கம் :

பீர்க்கன்காரணை அரசு பள்ளியில் ரூ.42 லட்சத்தில் சீரமைப்பு பணி, பூமி பூஜையுடன் தொடங்கியது.

தாம்பரம்

தாம்பரம் அருகே பீர்க்கன்காரணையில் ரூ. 42 லட்சத்தில் அரசு பள்ளி சீரமைப்புப் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது.

தாம்பரம் அருகே பீர்க்கன்காரணையில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் ஆய்வகக் கட்டிடம், பள்ளி வகுப்பறை, கழிப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் பராமரிப்பின்றி பழுதடைந்து காணப்பட்டன.

இதையடுத்து பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பிலும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பிலும் பள்ளியை சீரமைத்துத் தரவேண்டுமென தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர். ராஜாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட எஸ்.ஆர்.ராஜா இந்தப் பள்ளிக்கு ரூ. 42 லட்சம் நிதியை தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்தார்.

இந்நிலையில் ரூ.42 லட்சத்தில் பள்ளி சீரமைப்புப் பணிக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜா பங்கேற்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் அருள் செல்வி, பள்ளித் தலைமை ஆசிரியர் பொன்னுதாயி, முன்னாள் கவுன்சிலர் ஆர்.எஸ். சங்கர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x