Published : 11 Jun 2021 03:14 AM
Last Updated : 11 Jun 2021 03:14 AM
கடந்த 2018-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே கரிக்கன் நகரைச் சேர்ந்த ஜெயமூர்த்தி என்பவரை பாகூர் காவல் நிலைய போலீஸார் பிடித்துச் சென்றனர். அவர் மீது மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு போட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். அப்போது அவரது உடல்நிலை மோசமடைந்தது. பின்னர் அவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். காவல் நிலையத்திலும், சிறையிலும் அவர் தாக்கப்பட்டது தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு, இவ்வழக்கில் அப்போதைய பாகூர் சப்-இன்ஸ் பெக்டர் ஜெயகுருநாதன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் திருமால், காலாப்பட்டு மத்திய சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன், சிறை மருத்துவ அதிகாரி டாக்டர் வெங்கட ரமண நாயக் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் காவலர் புகார் ஆணையம் உத்தரவின்பேரில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகள் சேர்க்கப்பட்டன. இதன்பின்னர். இவ்வழக்குப் பிசிஆர் பிரிவுக்கு மாற்றப்பட்டது. தற்போது இவ்வழக்கு விசாரணையை பிசிஆர் பிரிவு எஸ்பி பாலகிருட்டிணன் மேற்கொண்டு வருகிறார்.
இதுதொடர்பாக மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாரன் கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்டவர்களின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், இவ்வழக்கில் விசாரணையையே தொடங்காததால் பாதிக்கப்பட்ட ஜெயமூர்த்தியின் மனைவி கெளசல்யாவிற்கு ரூ.1 லட்சம் உடனே அரசு வழங்க வேண்டும். இத்தொகையை, விசாரணை தொடங்காத காவல் அதிகாரிகள் யாரென்று கண்டறிந்து அவர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இதன்மீது விசாரணை மேற்கொண்ட காவல்துறை, விசாரணை அதிகாரியான பிசிஆர் பிரிவு எஸ்பி, அப்போதைய சிபிசிஐடி காவல் ஆய்வாளர் ஆகியோரின் சம்பளத்தில் இருந்து தலா ரூ.50 ஆயிரம் பிடித்தம் செய்துள்ளது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எஸ்ஐ ஜெயகுருநாதன், உதவி எஸ்ஐ திருமால், சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோரது பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விசாரணையை முடித்து உரிய காலத்தில் குற்ற அறிக்கையை தாக்கல் செய்யத் தவறிய, விசாரணையையே தொடங் காததால் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டவருமான பிசிஆர் பிரிவு எஸ்பி இவ்வழக்கை விசாரித்தால் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் கிடைக்காது. எனவே, இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரியை மாற்றவும், மீண்டும் பணியில் அமர்த்தப்பட்ட காவல் அதிகாரிகள், சிறைக் கண்காணிப்பாளர் ஆகியோரைப் பணிநீக்கம் செய்யவும் உத்தரவிட வேண்டுமென காவலர் புகார் ஆணையத்தில் மனு அளித்தோம்.
இம்மனு மீது விசாரணை மேற்கொண்ட காவலர் புகார் ஆணையத் தலைவர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராஜசூர்யா உத்தரவு பிறப்பித்தார். அதில் வழக்கு விசாரணையை தற்போதைய விசாரணை அதிகாரியிடம் இருந்து மாற்றி வேறொரு அதிகாரியிடம் ஒப்படைக்கவும், குற்றம் சாட்டப்பட்டவர்களை மீண்டும் பணியில் சேர்த்ததை மறுபரிசீலனை செய்யவும் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தி துணைநிலை ஆளுநர், தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோருக்கு மனு அளித்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT