Published : 11 Jun 2021 03:15 AM
Last Updated : 11 Jun 2021 03:15 AM
காரைக்கால் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணிகள் நேற்று தொடங்கப்பட்டன.
மேட்டூர் அணை நாளை (ஜூன் 12) திறக்கப்பட உள்ள நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பாசன வாய்க்கால்களை தூர் வாரும் நோக்கில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கோட்டுச்சேரி கிழக்கு கிராமப் பஞ்சாயத்துப் பகுதியில் உள்ள நெற்குருமா கன்னி வாய்க்கால் தூர் வாரும் பணியை, நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சந்திர பிரியங்கா, ஆட்சியர் அர்ஜூன் சர்மா ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் டி.தயாளன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியது: தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மூலம், மாவட்டத்தில் உள்ள 300 வாய்க்கால்களில் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. மாவட்டத்தின் 27 கிராமப் பஞ்சாயத்துப் பகுதிகளிலும் இப்பணி முழு வீச்சில் நடைபெறும். நெற்குருமா கன்னி வாய்க்கால் 1,050 மீட்டர் தொலைவுக்கு தூர் வாரப்பட உள்ளது. மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 160 குளங்களை தூர் வார திட்டமிடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர், காரைக்கால் மாவட்டத்துக்கு வருவதற்குள் பெரும்பான்மையான வாய்க்கால்களை தூர் வாரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT