Published : 11 Jun 2021 03:15 AM
Last Updated : 11 Jun 2021 03:15 AM
கல்லணைக் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க தடை கோரிய வழக்கில் நீர்வள திட்ட இயக்குநர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூரைச் சேர்ந்த பிரகாஷ், உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
கல்லணைக் கால்வாய் மூலம் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 2.27 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது கல்லணைக் கால்வாய் புனரமைப்பு பணி நடைபெறுகிறது. இதில் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கப்படுகிறது. இதனால் கால்வாயில் வரும் தண்ணீர் பூமிக்குள் செல்வதற்கு வாய்ப்பில்லை.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் நகரில் குடிநீர் தட்டுப்பாடு நிலவ வாய்ப்புள்ளது. மேலும் கான்கிரீட் தளம் அமைப்பதால் கால்வாய் கொள்ளளவும் பாதிக்கப்படும். இதனால் கால்வாயில் உடைப்பு ஏற்படும்.
கல்லணைக் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி 20 சதவீதம் முடிந்துள்ளது. எஞ்சிய பகுதிகளில் கான்கிரீட் தளம் அமைக்காமல் கால்வாய் கரைகள், பாலங்கள், படித்துறைகளை கான்கிரீட் கட்டுமானத்தால் பலப்படுத்தி தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு முறையாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், கான்கிரீட் தளங்களின் இடையே நீர் செல்வதற்கு குழாய்கள் அமைக்கப்படுகின்றன என்றார்.
பின்னர் மனு தொடர்பாக மாநில நீர்வள ஆதார திட்ட இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 5-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT