Published : 11 Jun 2021 03:15 AM
Last Updated : 11 Jun 2021 03:15 AM

ஏழை விவசாயிகளிடம் நிலம் பறிப்பு - வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு : தூத்துக்குடி ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கிய நிலத்தை தனியார் பெயருக்கு பட்டா வழங்கி, குவாரி நடத்த அனுமதி அளித்த வருவாய்த் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் தூத்துக்குடி ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் காந்திமதிநாதன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

கயத்தாறு தாலுகா முடுக்காலங் குளம் கிராமத்தில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2002-ல் பல ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில் 6 ஏக்கரை கோவில் பட்டியைச் சேர்ந்த ஜெயலெட்சுமி என்பவர் பெயருக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் பட்டா வழங்கியுள்ளனர். அவருக்கு சரள் மண் குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

போலி ஆவணங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன. ஏழை நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட விவசாய நிலத்துக்கு சட்டவிரோதமாக பட்டா வழங்கிய கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா (தற்போது மாவட்ட தாட்கோ மேலாளர்), கோவில்பட்டி வட்டாட்சியர் பாஸ்கரன் (தற்போது சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்), மண்டல துணை வட்டாட்சியர் தங்கையா (தற்போது துணை வட்டாட்சியர்) ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், விவசாய நிலங்களை மீட்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஐ.பினேகாஸ் வாதிட்டார்.

நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு வழங்கிய நிலத்தில் மணல் குவாரி நடத்த அனுமதி வழங்கியது எப்படி? இதற்கு துணை போன வருவாய் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டனர். அடுத்த விசாரணையை ஜூலை 9-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

கயத்தாறு தாலுகா முடுக்காலங்குளம் கிராமத்தில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2002-ல் பல ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x