Published : 11 Jun 2021 03:15 AM
Last Updated : 11 Jun 2021 03:15 AM
கோவில்பட்டி: கோவில்பட்டி தொழிற்பேட்டையில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் நேற்று காலை மினி லாரியில் தீப்பெட்டி கழிவுகளை ஏற்றினர். ஆலையிலிருந்து லாரி, வெளியே வந்தபோது, மேலே சென்ற மின்வயரில் தீப்பெட்டி கழிவுகள் உராய்ந்ததால். திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து லாரியை சில அடி தூரத்துக்கு நகர்த்திய ஓட்டுநர் அங்கேயே நிறுத்தினார்.
உடனடியாக தொழிலாளர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ வேகமாகப் பரவியதையடுத்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், அந்த வழியாக வந்த டேங்கர் லாரியிலிருந்த தண்ணீரை பயன்படுத்தி, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையிலான வீரர்கள் அங்கு வந்து, லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதில், மினி லாரி சேதமடைந்தது. பெரிய அளவு சேதம் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்தை டிஎஸ்பி கலைக்கதிரவன் பார்வையிட்டார். இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT