Published : 10 Jun 2021 03:11 AM
Last Updated : 10 Jun 2021 03:11 AM

பிளஸ் 1 சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ரத்து : பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

சென்னை

பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு அறிவிப்பை திரும்பப் பெறுவதாகவும் 9-ம்வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு இடம் வழங்கவும் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ்பரவலால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படுவதாக தமிழக அரசு கடந்த பிப்ரவரியில் அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியாகி சுமார் 4 மாதங்களாகிவிட்ட சூழலில்மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண்வழங்குவது குறித்த வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித் துறை இதுவரை வெளியிடவில்லை.

இதற்கிடையே, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் அளிப்பது தொடர்பாக அதிகாரிகள் குழு ஆய்வுசெய்து வருவதாக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம் அளித்திருந்தார். அதேநேரம் பெரும்பாலான தனியார் பள்ளிகள், உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்து இணையதள வழியில் வகுப்புகளையும் தொடங்கிவிட்டன.

இந்நிலையில், புதிய கல்வியாண்டு தொடங்கியதை அடுத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கைமேற்கொள்வதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித் துறை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில்,அதிக அளவிலான மாணவர்கள்விண்ணப்பிக்கும் பாடப்பிரிவுகளுக்கு மட்டும் தேர்வு நடத்தி அந்த மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பெற்றோர், மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கு பாமக, மார்க்சிஸ்ட் உட்பட அரசியல் கட்சிகள் எதிர்ப்புதெரிவித்தன. மேலும், நுழைவுத்தேர்வு அறிவிப்பை திரும்பப்பெற ஆசிரியர்கள், கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இந்த விவகாரம் சர்ச்சையானதை அடுத்துபிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு அறிவிப்பை பள்ளிக்கல்வித் துறை திரும்பப் பெற்றுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கையின் போது மிக அதிகப்படியான விண்ணப்பங்கள் வரும் பாடப் பிரிவுகளுக்கு பத்தாம் வகுப்பு பாடத்தின் அடிப்படையில் தேர்வுகள் எதுவும் நடத்த வேண்டாம். அதற்கு மாறாக மாணவர்களின் 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x