Published : 10 Jun 2021 03:11 AM
Last Updated : 10 Jun 2021 03:11 AM

சாஸ்த்ரா பல்கலை மாணவர் சேர்க்கை முறையில் மாற்றம் :

சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் 2021-ம் ஆண்டுக்கான பொறியியல் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை விதிமுறைகளில் மாற்றம் செய்துள்ளது.

இதுதொடர்பாக சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

இந்த புதிய விதிமுறையின்படி இந்த ஆண்டு 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 50 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்படும். மீதமுள்ள 50 சதவீத 12-ம் வகுப்பு மதிப்பெண் மற்றும் ஜேஇஇ மெயின் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் நடைபெறும். 12-ம் வகுப்பு, ஜேஇஇ ஆகியவற்றுக்கு சம மதிப்பு அளிக்கப்படும்.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கென சாஸ்த்ரா தனி நுழைவுத் தேர்வு நடத்தாது. மாணவர்கள் தங்களது 12-ம்வகுப்பு மதிப்பெண் கிடைக்கப் பெற்றதும், ஆன்லைன் மூலம் ஜூலை 31-ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். தரவரிசைப் பட்டியல் ஜூலை 31-ம் தேதி இரவு 9 மணிக்கு வெளியிடப்படும்.

மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கவுள்ளது. தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 30 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும். விண்ணப்பப் படிவங்களை www.sastra.edu என்ற இணையதளத்தின் மூலம் பெறலாம்.

இவ்வாறு சாஸ்த்ரா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x