Published : 10 Jun 2021 03:11 AM
Last Updated : 10 Jun 2021 03:11 AM
மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் பொதுமக்களுக்கு கரோனா மருந்துகள் வழங்கும் தனியார் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரோனா தொற்றின் அறிகுறிகள் முதலில் சளி, இருமல் போன்று உள்ளதால், பொதுமக்கள் அதனை சாதாரண வைரஸ் காய்ச்சல் என எண்ணுகின்றனர். அதற்கு பாரசிட்டமால் போன்ற மருந்துகளை மருத்துவர்களின் பரிந்துரையின்றி சுயமாக மருந்துகடைகளில் வாங்கி பயன்படுத்து கின்றனர்.
இதனால், அவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு தாமதமாக அடையாளம் காணப்பட்டு அதன்மூலம் ஆபத்தான சூழல் ஏற்படுகிறது. எனவே, காய்ச்சல் வந்தவுடன் சாதாரண காய்ச்சல் என புறக்கணிக்காமல், உடனடியாக மருத்துவரை அணுகி மருத்துவரின் பரிந்துரையின்பேரில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கரோனா தொற்று சிகிச்சைக்கு அசித்ரோமைசின், ஐவர்மெக்டின், டாக்ஸிசைக்கிளின், பாரசிட்டமால், ஸ்டீராய்டு மருந்துகள், வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த மருந்துகளை விற்பனை செய்யும்போது, கண்டிப்பாக மருத்துவர்களின் பரிந்துரை சீட்டை பெற வேண்டும். உயிர்காக்கும் ஸ்டீராய்டு மருந்துகள், வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், ஆன்டிபயாடிக் மருந்துகள் ஆகியவற்றின் இருப்பை சரியாக பராமரிக்க வேண்டும்.
மருத்துவர்களின் பரிந்துரை யின் பேரில் மேற்கண்ட மருந்து களை விற்பனை செய்தால், நோயாளியின் பெயர், முகவரி, செல்போன் எண் மற்றும் மருத்துவரின் தகவல்களை மருந்து கட்டுப்பாட்டு துறை மூலம் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும்.
வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்கு மருத்துவர்கள் தொலைபேசி அல்லது எஸ்எம்எஸ் மூலம் பரிந்துரை செய்திருந்தால் அதற்குண்டான ஆதாரங்களைப் பெற்றுக்கொண்டு மருந்துகளை வழங்கலாம். எக் காரணம்கொண்டும் மருந்துகளை பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT