Published : 10 Jun 2021 03:12 AM
Last Updated : 10 Jun 2021 03:12 AM

கிராமப் பகுதிகளில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் : ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

தருமபுரி மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களின் ஒன்றியக் குழு தலைவர்கள், உதவி இயக்குநர்கள் நிலையிலான மண்டல தொகுதி அலுவலர் களுக்கான ஆலோசனைக் கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தலைமை வகித்தார்.

கூட்டத்தில் அவர் பேசியது:

தருமபுரி மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளைவிட கிராமப்புறங்களில் கரோனா தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் ஊராட்சித் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் கிராமப்புற பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா பரவலை தடுக்க ஊராட்சித் தலைவர்கள் மூலம் அனைத்து குக்கிராமங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கிராமப்புறங்களில் சேகரமாகும் குப்பைகள் தூய்மைப் பணியாளர்கள் மூலம் உடனுக்குடன் அகற்றப்பட வேண்டும். இப்பணிகளை கண்காணிக்க ஊராட்சி ஒன்றிய அளவில் உதவி இயக்குநர் நிலையிலான அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தினமும் கள ஆய்வு செய்து கரோனா தடுப்புப் பணிகளை கண்காணித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தினசரி அறிக்கையாக அளித்திட வேண்டும். அதேபோல, பொது மக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். நோய் அறிகுறி தென்பட்டால் முறையான மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.

பொது இடங்களுக்கு வரும் அனைவரும் தவறாமல் முகக் கவசம் அணிய வேண்டும். தனி மனித இடைவெளியும் கடை பிடிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x