Published : 10 Jun 2021 03:12 AM
Last Updated : 10 Jun 2021 03:12 AM

பொது முடக்கத்தால் பெற்றோர் கடும் பாதிப்பு - கல்விக் கட்டணத்தை 3 மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் : புதுச்சேரி முதல்வருக்கு மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் கடிதம்

புதுச்சேரி

முதல்வர் ரங்கசாமிக்கு மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தின் விவரம் வருமாறு:

கரோனா தொற்று இரண்டாம் அலையில் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய ஊரடங்கால் நிறைய தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து வாழ்வாதாரத்திற்கு போராடி வருகின்றனர். சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளில் பணிபுரிந்தவர்கள் மற்றும் சுய தொழில் செய்வோரும் வருமானத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற சூழ்நிலையில் பெரும்பான்மையான பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் பெற்றோரிடம் ஆண்டு கட்டணத்தை செலுத்த வற்புறுத்தி வருகின்றன. உண்மையில் மக்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் கட்டணம் கேட்பதை குறைந்தது 3 மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தி உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அமைச்சருக்கு கடிதம்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கும் மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் கடிதம் ஒன்றை அனுப்பியிருக் கிறார், அதில், "கரோனா இரண்டாம் அலையில் புதுச்சேரியில் அனைவரும் பாதிக்கப் பட்டுள்ளனர். தற்போதுள்ள சூழலில் மக்கள் செலுத்த வேண்டிய பல்வேறு கடன்களுக்கான தவணைத் தொகைக்கு 6 மாத அவகாசம் வழங்க வேண்டும். கடன்களுக்கு வட்டி விதிக்கவும் 6 மாதங்களுக்கு தடை விதிக்க வேண்டும். இந்த நிதியாண்டில் முதலாவது காலாண்டில் கட்டவேண்டிய முன்கூட்டிய வரியை இரண்டாவது காலாண்டு வரை ஒத்திவைக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x