Published : 10 Jun 2021 03:12 AM
Last Updated : 10 Jun 2021 03:12 AM

கிராம மேம்பாட்டு ஆய்வறிக்கை தயாரித்த பள்ளி மாணவிக்கு நீதிபதிகள் பாராட்டு :

மதுரை

கிராம மேம்பாட்டு ஆய்வறிக்கை தயாரித்த பத்தாம் வகுப்பு மாணவியை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டினர்.ஆய்வறிக்கை விவரங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சேர்ந்த லட்சுமணன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: எனது மகள் கவுரி பத்தாம் வகுப்பு மாணவி. அவர் சிறு வயதில் இருந்தே கிராம வளர்ச்சி குறித்து பல்வேறு ஆய்வுகளை செய்துள்ளார். ஒவ்வொரு கிராமத்தின் பாரம்பரியம், பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு செய்துள்ளார்.

குறிப்பாக எங்கள் கிராமத்தின் தெருக்களின் பாரம்பரியம், குடிநீர் தேவைக்காக மக்கள் ஏரி, குளம் அமைத்தது குறித்தும் ஆய்வு செய்துள்ளார். இதன் அடிப்படையில் கிராம புள்ளி விவர பதிவை உருவாக்கி உள்ளார்.

இதுபோல், ஒவ்வொரு கிராம ஊராட்சி மற்றும் வார்டுகள் வாரியாக புள்ளி விவரப் பதிவை உருவாக்கவும், மாவட்ட ஆட்சியர் போல் கிராம ஆட்சியர் பதவியை உருவாக்கவும், என் மகள் தயாரித்த தேசிய கிராமப்புற மேம்பாட்டு ஆய்வறிக்கையை 5 மற்றும் 8-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக சேர்க்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. மாணவி கவுரி காணொலிக் காட்சி வாயிலாக ஆஜராகி, தனது ஆய்வு குறித்து விரிவாக விளக்கம் அளித்தார். அப்போது நீதிபதிகள், அரசுக்கு உதவும் வகையில் கிராம வளர்ச்சித் திட்டம் தயாரித்ததற்காக மாணவியை பாராட்டினர். பின்னர் மாணவியின் ஆய்வறிக்கை குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x