Published : 10 Jun 2021 03:13 AM
Last Updated : 10 Jun 2021 03:13 AM

பள்ளிப்பாளையம் அருகே எதிர்ப்பால் - அரசுப் பள்ளியில் இருந்த இரு சிலைகள் அகற்றம் :

பள்ளிபாளையம் அருகே அரசு தொடக்கப்பள்ளி நுழைவு வாயிலில் இருந்த சரஸ்வதி மற்றும் திருவள்ளுவர் சிலையை அகற்ற வேண்டும் என திக மற்றும் விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் வலியுறுத்தியதை தொடர்ந்து இரு சிலைகளும் அகற்றப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த கண்டிப்புதுார் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் முன்பகுதி சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. சுற்றுச் சுவரின் ஒரு பக்கத்தில் சரஸ்வதி சிலையும், மற்றொரு பக்கத்தில் திருவள்ளுவர் சிலையும் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சரஸ்வதி சிலையை திராவிடர் கழகத்தினரும், திருவள்ளுவர் சிலையை விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினரும் அகற்ற வலியுறுத்தினர்.

இதனால், இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு, பதற்றமான நிலை உருவானது. தகவல் அறிந்து அங்கு சென்ற பள்ளிபாளையம் போலீஸார் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

மேலும், இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து, இரு சிலைகளும் அகற்றப்பட்டது. அதன்பின்னர் இருதரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x