Published : 10 Jun 2021 03:14 AM
Last Updated : 10 Jun 2021 03:14 AM

அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு - திருவண்ணாமலைக்கு வரும் : என்னை சந்திப்பதை தவிர்க்கவும் : கட்சியினருக்கு அமைச்சர் எ.வ.வேலு வேண்டுகோள்

தி.மலையில் ஆய்வுக்காக வரும் பொழுது கரோனா பெருந்தொற்று காலத்தை கருத்தில் கொண்டு கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் என்னை சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழகத்தில் கரோனா பெருந் தொற்று காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சூழலில் ஊரடங்கை நாம் பின்பற்றி ஆதரவு அளிக்க வேண்டும். நான் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தி.மலைக்கு வரும் எனக்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும் என்று என்னை நேரில் சந்திக்கும் ஆர்வத்தில் அனைவரும் கூடினால் நமது அரசால் போடப்பட்ட ஆணையை நாமே புறக்கணிக்கிறோம் என்றாகிவிடும்.

எனவே, ஊரடங்கு முழு தளர்வுகள் ஏற்பட்டபின் என்னை சந்திக்கலாம். கரோனா பெருந்தொற்று முற்றிலும் குறையும் வரையும், ஊரடங்கு முடியும் வரை என்னை சந்திக்க வருவதை தவிர்த்திட வேண்டும். திருவண்ணாமலையில் இன்றும் (10-ம் தேதி) நாளையும் (11-ம் தேதி) அரசு சார்ந்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளேன்.

அரசு அலுவலர்கள் மட்டும் கலந்துகொள்ளும் கூட்டம் என்பதால் கட்சியினர், கூட்டணி கட்சியினர், நண்பர்கள் யாரும் அங்கு என்னை சந்திப்பதை தவிர்க்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x