Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு - கரோனாவால் மரணம் என இறப்பு சான்றிதழில் குறிப்பிட வேண்டும் : தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வேண்டுகோள்

சென்னை

கரோனா பாதிப்பால் இறந்தவர்களுக்கு, நோய்த் தொற்றால்தான் இறந்தார்கள் என்ற சரியான காரணத்தை குறிப்பிட்டு இறப்பு சான்றிதழ் அளிக்க வேண்டும் என்று அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கரோனா தொற்றின் காரணமாக தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை இறந்தவர்கள் எண்ணிக்கை 27,356 ஆகும். கடந்த ஒரு சில வாரங்களாக கரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, இறக்க நேரிட்டவர்களுக்கு, இறப்பு சான்றிதழில் கரோனா தொற்றால் இறந்தவர்கள் என குறிப்பிடுவதில்லை. மாறாக வேறு காரணங்களால் இறந்தார்கள் என்று இறப்பு சான்றிதழ் தருவதாக மாநிலம் முழுவதும் பல்வேறு புகார்களை பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கரோனா தொற்றால் இறப்பவர்களை, அதற்கான வழிமுறைகளை பின்பற்றி அடக்கம் செய்ய வேண்டும். ஆனால், கரோனா தொற்றால் இறந்தவர்களை வேறு காரணங்களால் இறந்தவர்கள் என்று இறப்பு சான்றிதழ் தருவதால், இறந்தவர்கள் உடல்களை ஒரு சிலர், வீட்டுக்கு எடுத்துச் சென்று உற்றார் உறவினர்கள் பங்கேற்கும் வகையில் இறுதிச் சடங்கை நடத்துகின்றனர். இதனால், கரோனா பரவும் சாத்தியம் உள்ளது.

மேலும், இறப்பு சான்றிதழில் வேறு காரணங்களை குறிப்பிடுவதால், கரோனா தொற்றால் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள நிவாரண உதவிகள் கிடைப்பதில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறியுள்ளனர்.

எனவே, கரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் இறந்தால், இறப்பு சான்றிதழில் கரோனா தொற்றால் தான் அவர்கள் இறந்தார்கள் என்ற சரியான காரணத்தை குறிப்பிட்டு அரசு சான்று அளிக்க வேண்டும்.

கரோனாவால் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகள் சரியான முறையில் சென்றடைவதையும், கரோனா வழிமுறைகளை பின்பற்றி, இறந்தவர்கள் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x