Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

இயந்திரங்கள் வாங்குவதற்கான தொகைக்கு - ஒரே தவணையில் மானியம் வழங்க தமிழக அரசு உத்தரவுகுறுந்தொழில் முனைவோர் : நன்றி

குறுந்தொழில் நிறுவனங்களுக்கு இயந்திரங்கள் வாங்கும் தொகையில் வழங்கப்படும் 25 சதவீத மானியத்தை ஒரே தவணையில் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதற்கு தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டாக்ட்) நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜே.ஜேம்ஸ் நேற்றுகூறியதாவது:

தமிழகத்தில் ரூ.25 லட்சத்துக்கு கீழ் உற்பத்தி திறன் கொண்ட குறுந்தொழில் நிறுவனங்கள் இயந்திரம் வாங்கும் தொகையில் 25 சதவீத மானியம் இதுநாள் வரை 3 ஆண்டுகளில் மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வந்தது. வங்கியில் கடன் கிடைக்க வாய்ப்பில்லாத குறுந்தொழில் முனைவோர், தங்களிடம் உள்ள பணத்தை கொண்டும், தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றும் இயந்திரங்களை வாங்குவது வழக்கம். இதில், மானியத் தொகையை பிரித்து வழங்கி வந்ததால் குறுந்தொழில் நிறுவனத்தினர் கடன்களை திருப்பி செலுத்துவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர்.

இதனால் மானியத் தொகையை ஒரே தவணையில் வழங்க வேண்டும் என கடந்த 2016-ம் ஆண்டு முதல் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தோம். எங்களது கோரிக்கையை தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார். மானியத் தொகையை ஒரே தவணையாக வழங்கவும், அதுவும் இம்மாத இறுதிக்குள் மானியத் தொகையை குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக கோவை தொழில் துறையினர் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x