Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

போலீஸார் பிடிக்க முயன்றபோதுதப்பியோடிய : இளைஞரை கத்தியால் குத்திய கும்பல் :

கோவை

கோவை கணபதிபுதூரை சேர்ந்தவர் டி.பார்த்திபன் (எ) பார்த்தசாரதி (23). இவர் மீது மாநகரில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இவர் நேற்று முன்தினம் கணபதி ஒத்த புளியமரம் அருகே தனது கூட்டாளிகள் நிதின், பிரகாஷ் மற்றும் பிரதீஷ்வர் ஆகியோருடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாரை பார்த்து பார்த்திபன் தப்பி ஓடினார். மற்ற மூவரும் கைது செய்யப்பட்டனர். 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய பார்த்திபன் கணபதி தாசர் வீதி பக்கம் சென்றார். அங்கு ஏற்கெனவே பார்த்திபனுடன் இளம் பெண் காதல் விவகாரம் ஒன்றில் முன்விரோதம் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் பார்த்திபனை பார்த்துள்ளார். தொடர்ந்து தனது நண்பர்கள் சபரி மற்றும் இருவருடன் சேர்ந்து பார்த்திபனை விரட்டி தாக்கியுள்ளார். இதில் பார்த்திபனுக்கு தலை மற்றும் முதுகு பகுதியில் கத்திக்குத்து விழுந்தது. ரத்தக் காயங்களுடன் பொதுமக்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிகிச்சை பெற்று வந்த பார்த்திபன் கஞ்சா விற்பனை வழக்கில் போலீஸார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்பதற்காக, அன்று இரவு மருத்துவமனையிலிருந்து தப்பியோடினார். அவர் மீது கஞ்சா விற்பனை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பார்த்திபனை தாக்கியதற்காக ராஜேஷ் உட்பட 4 பேர் மீது சரவணம்பட்டி போலீஸார் தனியாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x