Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருப்பவர்களுக்கு - சூடான உணவை வழங்க வேண்டும் : ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

குழந்தைகள் இல்லங்களில் தங்கியிருப்பவர்களுக்கு சூடான உணவை வழங்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் சமூக பாதுகாப்புத் துறையின்கீழ் குழந்தைகள் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த இல்லங்களில் வீடு அல்லது தங்குமிடம் இல்லாத, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள் தங்கியிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளின் உடல்நலன், மருத்துவர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், இங்கு தங்கியுள்ள குழந்தைகளுக்கு தினமும் சூடான உணவை வழங்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சமூக பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்குத் தேவையான உணவு, உடை, மருத்துவம் உள்ளிட்டவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. கரோனா தொற்றால் குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்க, பால், முட்டை, கொண்டைக் கடலை உள்ளிட்ட ஊட்டச்சத்தான உணவுகளை வழங்கி வருகிறோம். கரோனா காலத்தில் சூடான உணவுகளை சாப்பிடுவதுதான் நல்லது என்று மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

எனவே, உணவுகளை சமைத்த அரை மணி நேரத்துக்குள் குழந்தைகளுக்கு பரிமாற வேண்டும். சூடான உணவைத்தான் வழங்க வேண்டும். உணவு சமைக்கும் இடத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஊழியர்களும் அறிவுறுத்தல்களை கடைபிடித்து குழந்தைகளுக்கு உணவுகளை அளித்து வருகின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x