Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM
புதுச்சேரியில் உள்ள சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் 35,141 பேருக்கு முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. இதற்கிடையே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஒப்பந்த மருத்துவர், செவிலியர் உட்பட 7 சுகாதார ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பலர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை.
மேலும், புதுவை அரசு பொது மருத்துவமனை, ராஜீவ் காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனை களில் பணிபுரியும் செவிலியர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டுவதாக சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறியிருந்தார். இந்நிலையில், அனைத்து மருத்துவமனைகளிலும் பணிபுரியும் சுகாதார ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான தகவல்களை உடனடியாக சமர்பிக்க தலைமைச்செயலர் அஸ்வனிகுமார் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத் துறையின் நோய்த்தடுப்புத்துறை துணைஇயக்குநர் முருகன், அனைத்து மருத்துவத் துறைகளின் தலைமைக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "தலைமைச் செயலரின் உத்தரவின்படி, தங்களது தலைமையின் கீழ்இயங்கும் மருத்துவமனைகள், மருத்துவநிர்வாகத்தில் பணியாற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் கரோனா தடுப்பூசி செலுத்தியதற் கான தகவல்களை தெரிவிக்க வேண்டும். இதற்கான தகவல்களை நோய்த்தடுப்புத் துறைக்கு ddimmpuducherry@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு சமர்பிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன்அடிப்படையில் அனைத்து மருத்துவத்துறைகளின் தலைமையிலிருந்து வந்த தகவல்களின் அடிப்படையில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் பட்டியலை தயாரித்து, தலைமைச் செயலருக்கு அனுப்பும் பணி நேற்று நடந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT