Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

ஈரோடு மாநகராட்சியில் 45 இடங்கள் தனிமைப்படுத்தி கண்காணிப்பு : நேற்று 2,003 பேர் குணமடைந்தனர்

ஈரோட்டில் நேற்று கரோனா தொற்று பாதிப்பில் இருந்து 2003 பேர் குணமடைந்துள்ளனர். மாநகராட்சி பகுதியில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் 45 இடங்கள் நோய்கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒரு வீதி அல்லது தெருவில் 5-க்கும் மேற்பட்ட குடும்பத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அப்பகுதி நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறியதாவது:

ஈரோடு நகரில் கரோனா தொற்றால், தினசரி 400 முதல் 420 பேர் பாதிக்கப்படுகின்றனர். தொற்றினை முன்னதாக கண்டறிய வீடு வீடாகச் சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளோருக்கு அந்த பகுதியிலேயே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

அதன்பேரில், நேற்று முன்தினம் 300 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் வீட்டிலேயே தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஈரோடு மாநகராட்சியில் 45 இடங்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவும், தினசரி சுகாதார பணியாளர்கள் மூலம் மருத்துவ ஆலோசனைகளும், மருந்துகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்றைய பாதிப்பு

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் நேற்று 1596 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2003 பேர் குணமடைந்துள்ள நிலையில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 14 ஆயிரத்து 248 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x