Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது : 3.5 டன் அரிசி, 2 கார்கள் பறிமுதல் :

தூத்துக்குடி: தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எஸ்ஐ வேல்ராஜ் தலைமையிலான தனிப்படை போலீஸார் புதிய பேருந்து நிலையம் அருகில் நேற்று முன்தினம் மாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த வேன் மற்றும் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

இரு கார்களிலும் 70 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் மொத்தம் 3.5 டன் ரேஷன் அரிசி இருந்தது. அரிசி மூட்டைகள் மற்றும் கார்களை பறிமுதல் செய்த போலீஸார், கார்களில் இருந்த தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த செல்லையா மகன் சிவப்பிரகாஷ் (27), டூவிபுரத்தைச் சேர்ந்த பாலு மகன் அருண்குமார் (25), ராஜகோபால் நகரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மணிகண்டன் (26) மற்றும் வி.எம்.எஸ். நகரைச் சேர்ந்த குமார் மகன் கார்த்திக் (25) ஆகிய 4 பேரையும் கைது செய்து, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கைதானவர்களிடம் விசாரித்ததில் தூத்துக்குடி அண்ணாநகரில் உள்ள மாவு மில் உரிமையாளரிடம் வேலை செய்வதாகவும், ரேஷன் அரிசியை வாங்கி மில்லுக்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர். மாவு மில் உரிமையாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x