Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

பெரம்பலூர் அருகே தம்பதியரை கொன்று நகை கொள்ளை :

பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி(62). விவசாயி. இவரது மனைவி அறிவழகி(48). இவர்களது மகன் முருகானந்தம் சென்னையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று காலை சென்னையில் உள்ள முருகானந்தம் தனது தாய் அறிவழகியின் செல்போனுக்கு பலமுறை தொடர்பு கொண்டும் அழைப்பை ஏற்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த முருகானந்தம், அருகில் வசிக்கும் அவரது சித்தப்பாவுக்கு நேற்று மாலை இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சித்தப்பா வீட்டினர் பெரியசாமி வீட்டுக்குச் சென்று பார்த்தபோது பெரியசாமி, அறிவழகி இருவரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர். அறிவழகி அணிந்திருந்த 10 பவுன் சங்கிலி கொள்ளை போயிருந்தது. வீட்டிலிருந்த பீரோவை உடைத்து மர்ம நபர்கள் துணி உள்ளிட்ட பொருட்களை களைத்துப் போட்டுச் சென்றிருந்தனர்.

தகவலின் பேரில் குன்னம் போலீஸார் அங்கு சென்று தம்பதியர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, தம்பதியரை கொலை செய்து நகையை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x