Published : 08 Jun 2021 03:13 AM
Last Updated : 08 Jun 2021 03:13 AM

புதுச்சேரியில் தொடர்ந்து உச்சத்தில் இருந்த கரோனா தொற்று - 53 நாட்களுக்குப் பிறகு 500க்கு கீழ் குறைந்தது :

புதுச்சேரியில் தொடர்ந்து உச்சத்தில் இருந்த கரோனா தொற்று பாதிப்பு 53 நாட்களுக்குப் பிறகு 500க்கு கீழ் குறைந்து 482 ஆகியுள்ளது.

புதுச்சேரியில் கரோனா தொற்றுஏப்ரல் இரண்டாவது வாரத்தில் அதிகரித்தது. குறிப்பாக ஏப்ரல் 15-ம் தேதி 413 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து தொற்றின் பாதிப்பு 500ல் தொடங்கி 2 ஆயிரத்தை தாண்டியது. நோய் பரவலில் அசாதாரணமான நிலை உருவானது.

இந்நிலையில் கரோனா தொற்றின் பாதிப்பு கிட்டத்தட்ட 53 நாட்களுக்குப் பிறகு நேற்று 500க்கு கீழ் குறைந்து 482 ஆனது.

புதுச்சேரி மாநிலத்தில் நேற்று புதிதாக 7,731 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 400, காரைக்கால் – 53, ஏனாம் – 13, மாகே – 16பேர் என மொத்தம் 482 (6.23 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுவையில் 6 பேர்,காரைக்காலில் 3 பேர், ஏனாமில்ஒருவர் என 10 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 7 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள் ஆவர். இதில் 30 வயது ஆணும் ஒருவர்.

உயிரிழப்புகள் குறையவில்லை

புதுச்சேரியில் தொற்று குறைந்தாலும் உயிரிழப்புகள் இரட்டை இலக்கத்திலேயே உள்ளன. ஏப்ரல், மே மாதங்களில் உயிரிழப்புகள் உச்சத்தில் இருந்தன. ஜூன் மாதம் தொடங்கி நேற்று வரையிலான ஒரு வாரத்தில் கரோனா தொற்றால் 102 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று புதிதாக 10 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களைச் சேர்த்து புதுவை மாநிலத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,638 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஜிப்மரில் 423 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 284 பேரும், கோவிட் கேர் சென்டரில் 252 பேரும்சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் 6,346 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 7,546 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 1,196 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

91.62 சதவீதம் குணமடைந்தனர்

புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் நேற்று கூறுகையில், "புதுச்சேரியில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கரோனா தொற்றிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை (1,00,377) தாண்டியது. குணமடைந்தோர் சதவீதம் 91.62 ஆக உள்ளது. பொது மக்கள் அனைவரும் முகக்கவசம் சரியாகஅணிந்து, தனிநபர் இடைவெளியைகட்டாயம் கடைபிடித்து, கை சுத்தம் பேணி, கரோனா தடுப்பூசியும் போட்டுக் கொண்டால் கரோனாவில் இருந்து முற்றிலும் விடுபடலாம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x