Published : 08 Jun 2021 03:14 AM
Last Updated : 08 Jun 2021 03:14 AM

பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் : காவிரி டெல்டா பாசனதாரர்கள் முன்னேற்ற சங்கம் கோரிக்கை

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்தால் மட்டும் போதாது. சாகுபடி பணிகளை தொடங்க ஏதுவாக பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதால், நாகை, மயிலாடுதுறை மாவட்ட கடைமடை பகுதிக்கு காவிரி நீர் விரைந்து வந்து சேர்ந்தது. இதனால், சராசரி அளவைவிட கூடுதலான பரப்பில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பயிர் முற்றி அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், அடுத்தடுத்து உருவான நிவர் மற்றும் புரெவி புயல் தாக்கம் மற்றும் பருவம் தவறி பெய்த தொடர் கனமழையின் காரணமாக சம்பா மற்றும் தாளடி பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன.

இதையடுத்து, பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, பயிர்க் காப்பீடு தொகைக்கான மாநில அரசின் பங்கு தொகையை, அப்போ தைய அதிமுக அரசு இடைக்கால பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக காப்பீட்டு நிறுவனத்தில் செலுத்தியது. ஆனால், விவசாயிகளுக்கு காப் பீட்டுத் தொகை இதுவரை வழங் கப்படவில்லை.

இதுதொடர்பாக காவிரி டெல்டா பாசனதாரர்கள் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் குரு.கோபி கணேசன் கூறியது:

கடந்த ஆண்டு நேரிட்ட புயல் மற்றும் மழை சேதங்களை பார்வையிட்ட மத்திய குழு, பாதிக் கப்பட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட கிராமங் களில் முழு பாதிப்பு கணக்கு எடுக்கப்பட்டு, 6 மாதங்களுக்கு மேலாகியும், டெல்டா மாவட்டங் களின் காப்பீட்டு நிறுவனமான இப்கோ நிறுவனம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை இன்னும் வழங்கவில்லை.

நாகை மாவட்டத்தில், 2020-21-ம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை, விவசாயிகளுக்கு வழங்காததால், நிகழாண்டில் குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்வதற்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது. தொடர் மழையால் பாதிப்பை சந்தித்த டெல்டா மாவட்ட விவசாயிகள், தற்சமயம் ஊரடங்கு நேரத்தில் வருவாய் இல்லாததால், ஹெக்டேருக்கு ரூ.35 ஆயிரம் காப்பீட்டுத் தொகை வழங்கினால் மட்டுமே விவசாய பணிகளை தொடங்க முடியும். அரசு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்தால் மட்டும் போதாது. சாகுபடி செய்வதற்கு தேவையான நிதி ஆதாரத்துக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும். காப்பீட்டு நிறு வனத்துக்கு உரிய அழுத்தம் கொடுத்து விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை கிடைக்க போர்க்கால அடிப்படை யில், நடவடிக்கை எடுக்க வேண் டும் என அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x