Published : 07 Jun 2021 03:12 AM
Last Updated : 07 Jun 2021 03:12 AM

கூட்டணி சேரும் முருகதாஸ் - யாஷ் : பயணத்தின் பின்னணி கதை! : இதயத்துக்கு நெருக்கமான படம்! : த்ரில்லர் காதல் களம் : சவாலை எதிர்கொள்ளும் பெண்கள் :

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ‘தர்பார்’ படத்தை தொடர்ந்து, கதை உருவாக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், அடுத்தடுத்து 3 கதைகளுக்கான திரைக்கதைகளை முடித்திருக்கிறார். தமிழில் கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் ஆசை. இதன்படி, கமலை சந்தித்து கதை கூறியுள்ளார். சமீபத்தில் ‘கேஜிஎஃப்’ படத்தின் நாயகன் யாஷை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார். இப்படத்தை இந்திய அளவில் பிரம்மாண்டமாக உருவாக்கும் திட்டத்தில் இருவரும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். இப்படம் தொடர்பான அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, கமலின் பதிலுக்காகவும் காத்திருக்கிறார் முருகதாஸ்.

விஜய் ஆன்டனி நடிப்பில் வெளிவந்த ‘காளி’ திரைப்படத்தை தொடர்ந்து, தான் இயக்கும் புதிய படத்துக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் கிருத்திகா உதயநிதி. பிரதானமாக காதல், கொஞ்சம் ஆக்‌ஷன், காமெடி கலந்த கவலையாக உருவாகும் இப்படத்தின் பெரும்பகுதி பயணத்தின் பின்னணியில் நகர்கிறது. இதில் நாயகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு பிரதீப் இசையமைக்கிறார். ரைஸ் ஈஸ்ட் கிரியேஷன் சார்பில் சாகர் பென்டலா தயாரிக்கும் இப்படத்தின் வேலைகள் விரைவில் தொடங்க உள்ளன.

கடந்த 2015-ல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘காக்கா முட்டை’. இத்திரைப்படம் வெளியாகி 6 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதை தனது ட்விட்டர் பதிவில் நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ‘‘காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது. 6 ஆண்டுகளுக்கு முன்பு சரியாக இதே நாளில் ‘காக்கா முட்டை’ திரைப்படம் வெளியானது. எப்போதும் என் இதயத்துக்கு நெருக்கமாக இருக்கும் மிகச்சிறந்த படம். இப்படம்தான் தடைகளை உடைத்து, எனது சினிமா வாழ்க்கையை உயர்த்தியது. இப்படத்தை கொடுத்த இயக்குநர் மணிகண்டன், தயாரிப்பாளர்கள் தனுஷ், வெற்றிமாறன் ஆகியோருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி’’ என்று தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

விக்ரம், த்ருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. காதல் கலந்த ஆக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரன், வாணிபோஜன் நடிக்கின்றனர். முதல் பகுதியில் காதலுக்கும், 2-ம் பகுதியில் ஆக்‌ஷனுக்கும் முக்கியத்துவம் அளித்து உருவாகும் இப்படத்தில் வாணிபோஜன் ஏற்று நடிக்கும் பகுதி, த்ரில்லர் கலந்த காதல் களமாக உருவாகிறது.

இயக்குநர் விஜய் இயக்கி முடித்துள்ள ‘தலைவி’ படம் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. அடுத்து, நாயகிகளை மையமாகக் கொண்டு ஒரு படத்தை எடுத்து வருகிறார். ‘அக்டோபர் 31 லேடீஸ் நைட்’ என்று தற்போது பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் 5 நாள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி உள்ளது. ஓடிடி தளத்தில் வெளியீடு என்ற முடிவோடு எடுக்கப்பட்ட இப்படத்தை சோனி லைவ் நிறுவனம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. இரவில் 4 பெண்கள் சந்திக்கும் பிரச்சினை, அதுதொடர்பாக அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், தைரியமிக்க சம்பவங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இதில் நாயகிகளாக மஞ்சிமா மோகன், நிவேதா பெத்துராஜ், மேகா ஆகாஷ், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x