Published : 07 Jun 2021 03:12 AM
Last Updated : 07 Jun 2021 03:12 AM

தமிழை மத்திய அரசின் ஆட்சி மொழியாக்க திமுக அரசு உறுதியுடன் பாடுபடும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

சென்னை

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இந்திய அரசின் ஆட்சி அலுவல் மொழியாகிட திமுக அரசு உறுதியுடன் பாடுபடும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்க் கொடியை கையில் ஏந்தி, 14 வயதிலேயே தாய்மொழி காக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட கருணாநிதியின் மொழி, இனப்போராட்ட வரலாற்றின் இன்றியமையாத சாதனைகளில் ஒன்று, நம் தமிழ் மொழிக்கு மத்திய அரசின் செம்மொழித் தகுதி கிடைக்கச் செய்ததாகும்.

பரிதிமாற்கலைஞரில் தொடங்கிபல தமிழ் அறிஞர்களும் 100 ஆண்டு காலமாக வலியுறுத்திய செம்மொழித் தகுதி, கருணாநிதியின் பெருமுயற்சியால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிடம் வலியுறுத்தப்பட்டது. கூட்டணியின் தலைவராக இருந்த சோனியா காந்தி, பிரதமராக இருந்த மன்மோகன் சிங் ஆகியோர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்றனர். தமிழுக்கு செம்மொழித் தகுதிவழங்கப்படும் என்ற அறிவிப்பு 2004-ம் ஆண்டு ஜூன் 6-ம் தேதிவெளியானது. அதற்கான அரசாணை அதே ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி வெளியிடப்பட்டது.

உலகின் மூத்த மொழி, திராவிட மொழிக் குடும்பத்தின் தாயாகவிளங்கும் மொழி, இலக்கிய, இலக்கண வளங்கள் கொண்ட சிறப்பான மொழி, பழமைக்குப் பழமையாய் புதுமைக்குப் புதுமையாய் தன்னை தகவமைத்துக் கொண்டு, கல்வெட்டு காலம் முதல் கணினிக் காலம் வரை சிறப்புற்று விளங்கும் மொழியான அன்னைத் தமிழுக்கு கருணாநிதி சூட்டிய அணிகலனே செம்மொழித் தகுதியாகும்.

அந்தத் தகுதிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், எத்திசையும் தமிழ் மணக்க திமுக அரசு தொடர்ந்து உழைக்கும். நமது அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இந்திய அரசின் ஆட்சி, அலுவல் மொழியாக உறுதியுடன் பாடுபடும்.

இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x