Published : 07 Jun 2021 03:13 AM
Last Updated : 07 Jun 2021 03:13 AM

கரோனா காலத்தில் கிராமங்களில் சுற்றித் திரியும் - தெருநாய்களை தேடிச்சென்று உணவளிக்கும் இளைஞர்கள் :

தெரு நாய்களுக்கு உணவு வழங்கும் கரிக்கலாம்பாக்கம் கிராம இளைஞர்கள்.

புதுச்சேரி

கரோனா காலத்தில், கிராமப் பகுதிகளில் தெரு நாய்களை தேடிச் சென்று உணவு வழங்கி வருகின்றனர் புதுச்சேரி அருகில் உள்ள கரிக்கலாம்பாக்கம் கிராம இளைஞர்கள்.

கரோனா பரவலால் வாயில்லாஜீவன்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தெரு நாய்களுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. இதுபற்றி சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு, உணவு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. உணவு வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுச்சேரியிலும் கரோனா ஊரடங்கால் தெரு நாய்களுக்கு இதே சிக்கல் நீடிக்கிறது. நகரப் பகுதியில் பலரும் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள், மாடுகள் உள்ளிட்ட வாயில்லா ஜீவன்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். ஆனால், கிராமப் பகுதியில் இந்த தருணத்தில் நாய்கள் உணவின்றித் தவிக் கின்றன. புதுச்சேரியில் உள்ள கிராமப் பகுதியான கரிக்கலாம் பாக்கத்தைச் சேர்ந்தவர் பிரேம். பொறியியல் பட்டதாரியான இவர், அப்பகுதி இளைஞர்களுடன் சேர்ந்து தன்னார்வலர் குழு ஒன்றை நடத்தி வருகிறார். இதன் மூலம் ஆதரவற்றவர்களுக்கு உணவு மற்றும் பொருட்கள் வழங்கி வந்தார்.

தேடிச் சென்று சேவை

தற்போது ஊரடங்கில், தெரு நாய்கள் உணவின்றி அவதிப்படுவதைக் கண்ட இந்த அமைப்பினர், அவைகளுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

இதுபற்றி பிரேம் கூறுகையில், " கரிகலாம்பாக்கம், அதன் அருகில் உள்ள வில்லியனூர் மற்றும் கோர்காடு உள்ளிட்ட 10 கிராமங்களில் நாள்தோறும் ஒருவேளை உணவை வீட்டில் தயாரித்து எங்கள் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் மூலம் தருகிறோம்.

வாரத்தில் 3 நாள் கறி சோறு தருகிறோம். நாள்தோறும் பிஸ்கட், பிரட் ஆகியவையும் தருகிறோம். பண நெருக்கடிக்கும் மத்தியில் இதைச் செய்கிறோம். எங்கள் வருகைக்காக நாய்கள் காத்திருந்து, உணவு சாப்பிடுவதை பார்க்கும் போது, பட்ட சிரமம் பறந்து போகிறது " என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x