Published : 07 Jun 2021 03:14 AM
Last Updated : 07 Jun 2021 03:14 AM
நாகப்பட்டினம்: சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் செ.நா.ஜனார்த்தனன், பொதுச் செயலாளர் என்.ரவி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2020-21-ம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு ஆய்வு செய்து சமர்ப்பிக்கும் அறிக்கைப்படி மாணவர்களுக்கு இறுதித் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும் என்றும், அந்த மதிப்பெண்ணைக் கொண்டே தமிழகத்திலுள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிந்து, தீர ஆய்வு செய்து முடிவெடுத்திருப்பது பாராட்டுதலுக்குரியது. இதை நாங்கள் வரவேற்கிறோம். மேலும், நீட் தேர்வால் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் பாதிக்கப்படுவதால், சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளதையும் வரவேற்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT