Published : 07 Jun 2021 03:15 AM
Last Updated : 07 Jun 2021 03:15 AM
அரக்கோணத்தில் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த இளைஞர் பட்டப்பகலில் 6 பேர் கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டது குறித்து 3 தனிப்படைகளை அமைத்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ராஜாபாதர் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (36). இவர், கடந்த ஆண்டு கோகுல் என்ற இளைஞர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட இவர் கடந்த 4-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில், அரக்கோணம் போலாட்சியம்மன் கோயில் அருகேயுள்ள நண்பர் கண்ணன் என்பவரின் வீட்டுக்கு நேற்று பிற்பகல் சென்றுள்ளார். அந்த வீட்டின் மாடியில் இருவரும் 3 மணியளவில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்தனர்.
அப்போது, பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்த 6 பேர் கும்பல் கார்த்திக்கை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதையறிந்த கண்ணன் தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவலின்பேரில் அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன், நகர காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் மற்றும் காவலர்கள் விரைந்து சென்று கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற கோகுல் கொலைக்கு பழிவாங்கவே அவரது நண்பர்கள் இந்த கொலையில் ஈடுபட்டுள்ளதாக காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து தப்பிச் சென்ற கொலையாளிகளை பிடிக்கவும், கொலையில் தொடர்பு டையவர்கள் யார்? என்பது குறித்து 3 தனிப்படைகளை அமைத்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT