Published : 06 Jun 2021 03:11 AM
Last Updated : 06 Jun 2021 03:11 AM

நீட் உள்ளிட்ட தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

கரோனா பரவல் அதிகமாக இருப்பதால் தேசிய அளவில் நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

நாடு முழுவதும் சிபிஎஸ்இ12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால், மருத்துவம், தொழில்நுட்ப படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு நிறுவனங்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவதற்கு சாதகமான சூழல் இல்லாத நிலையில், நுழைவுத் தேர்வுகளை மட்டும் நடத்த முற்படுவதை ஏற்க முடியாது.

மாணவர்கள் தயாராகவில்லை

கரோனா முதல் அலையைவிட 2-வது அலை மிகக் கடுமையாக உள்ளது. அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டில் ஒருநாள்கூட நேரடி வகுப்புகள் நடக்கவில்லை. ஆன்லைன் வகுப்புகளின் தரம் எந்த அளவு சீராக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. மாணவர்கள் மனதளவில் மட்டுமின்றி, கல்வி அளவிலும் எந்த தேர்வுக்கும் தயாராகவில்லை.

இந்த சூழலில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வு நடத்தினாலும், அது மனித உரிமை மீறலாகவே அமையும்.

தேர்வுகளா, மாணவர்களின் உயிரா என்று பார்த்தால் மாணவர்களின் உயிருக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.

எனவே, தேசிய அளவில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் இந்த ஆண்டு ரத்து செய்ய வேண்டும்.

மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட தேர்வு வாரியங்கள் வழங்கியுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் கலை, அறிவியல், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்த மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x