Published : 05 Jun 2021 03:11 AM
Last Updated : 05 Jun 2021 03:11 AM

கரோனா வைரஸ் வூஹானில் இருந்து வந்தது உறுதியாகிவிட்டது - சீனாவுக்கு அபராதம் விதிக்க வேண்டும் : முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்தல்

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் ஆய்வகத்தில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கரோனா வைரஸ் பரவி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் 37 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அப்போது அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு ட்ரம்ப், வூஹான் ஆய்வகத்தில் இருந்துதான் கரோனா வைரஸ் பரவி இருப்பதாக வெளிப்படையாக அறிவித்தார். மேலும், ‘சீன வைரஸ்’ என்றே அதை அவர் அழைத்து வந்தார்.

இதனிடையே, அமெரிக்கா, பிரிட்டனைச் சேர்ந்த சில விஞ்ஞானிகளும், வைரஸ் நிபுணர் களும் கரோனா பெருந்தொற்று குறித்து ஆய்வு மேற்கொண்டு கடந்த வாரம் ஆய்வறிக்கை வெளியிட்டனர். அதில், "கரோனா வைரஸ் இயற்கையாக உருவானதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. ஆனால், அவை வூஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்பதை உறுதி செய்வதற்கு பல தரவுகள் இருக்கின்றன" என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், அமெரிக்க தொற்று நோய் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் அந்தோணி பவுசிக்கும், சீனாவைச் சேர்ந்த வைரஸ் விஞ்ஞானி ஒருவருக்கும் இடையே கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில் இ மெயில் உரையாடல்களை வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை சமீபத்தில் வெளியிட்டது. இதில், கரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்தில் இருந்து பரவிய விஷயத்தை பவுசி மறைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘‘

கரோனா வைரஸ் சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் இருந்துதான் வந்தது என நான் கூறியது சரியாகிவிட்டது. இப்போது அமெரிக்காவில் உள்ள எனது எதிரிகள் கூட எனது கூற்று சரியானதுதான் என்று பேசுகின்றனர்.

ஒட்டுமொத்த மனித குலத்தையும் மாபெரும் அழிவுப்பாதைக்கு கொண்டு சென்ற சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு 73 டிரில்லியன் டாலரை (ரூ.73 லட்சம் கோடி) இழப்பீடாக சீனா வழங்கவேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x