Published : 05 Jun 2021 03:11 AM
Last Updated : 05 Jun 2021 03:11 AM

தென்மேற்கு பருவமழையால் - வட உள்மாவட்டங்களில் மழை பெய்யும் :

கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை தற்போது தமிழகத்தில் பரவி வருகிறது. இதன் காரணமாக வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தென்மேற்குப் பருவமழை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் முன்னேறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னேற வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதிகள் ஆகிய இடங்களில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

மேலும் கர்நாடகம் முதல் தென்தமிழகம் வரை மற்றொரு காற்று சுழற்சி நிலவுகிறது. இவைகாரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும், 5-ம் தேதி வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும்.

6-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமானமழையும், உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும்.

7, 8-ம் தேதிகளில் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியமாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x