Published : 05 Jun 2021 03:12 AM
Last Updated : 05 Jun 2021 03:12 AM

கரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்ததாக புகார் - கோவை தனியார் மருத்துவமனையில் கரோனா நோயாளிகளை அனுமதிக்க தடை :

கோவையில் அதிக கட்டணம் வசூலித்ததாக எழுந்த புகார் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்காத தனியார் மருத்துவமனையில் புதிதாக கரோனா நோயாளிகளை அனுமதிக்க தற்காலிக தடை விதித்து மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் உத்தரவிட்டுள் ளார்.

கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த ஷாஜகான் (63) கடந்த ஏப்ரல் 24-ம் தேதி கரோனாஅறிகுறிகளுடன் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். அங்குசிகிச்சை பலனின்றி மே 20-ம்தேதி அவர் உயிரிழந்தார். இதைய டுத்து, அவரது மகன் நதீமிடம் மருத்துவமனை நிர்வாகம் ரூ.16லட்சம் கட்டணமாக கேட்டுள்ளனர். காப்பீடு செய்துள்ள தனியார் காப்பீட்டு நிறுவனத்திடம் நதீம் கேட்டபோது ரூ.15 லட்சம் மருத்துவமனை தரப்பில் முன்னதாகவே கோரப்பட்ட தகவல் கேட்டு அதிர்ச்சியடைந் தார். மேலும், ரசீதுகளை வாங்கிப்பார்த்தபோது அதில், ரூ.11.55 லட்சம் என கட்டணம் தெரிவிக்கப் பட்டுள்ளது.

எனவே, அதிக கட்டணம் நிர்ணயித்து மோசடி செய்ய முயன்றது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் நதீம் நேற்று முன்தினம் புகார் தெரிவித்தார். இப்புகார் அடிப்படையில் விசாரணை நடத்த குழு அமைத்து, மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் உத்தரவிட்டார். விசாரணை அடிப்படையில் மாவட்ட சுகாதாரத் துறை இணைஇயக்குநர் (பொறுப்பு) ராஜா பிறப் பித்துள்ள உத்தரவில், "கரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்ததாக பெறப்பட்ட புகார்கள் அடிப்படையில், சரவணம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் விசாரணை மேற்கொள் ளப்பட்டது. விசாரணைக்கு அந்தமருத்துவமனை ஒத்துழைக்க வில்லை. கேட்கப்பட்ட வரவு, செலவு கணக்குகள், ஆவணங் களை சமர்ப்பிக்கவில்லை. எனவே, விசாரணை முடிவடையும் வரை புதிதாக எந்த கரோனா நோயாளியையும் மருத்துவமனை அனுமதிக்கக் கூடாது.

தற்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்து டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார். இதுதவிர, கோவையில் மேலும் 3 தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி அமைக் கப்பட்ட குழுவினர் விசாரணை செய்து ஆட்சியரிடம் அறிக்கை அளித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x