Published : 05 Jun 2021 03:13 AM
Last Updated : 05 Jun 2021 03:13 AM

தடுப்பூசிகளை மத்திய அரசே தர குடியரசுத் தலைவருக்கு மனு : ஆளுநர் மாளிகையில் காங்கிரஸார் அளித்தனர்

புதுச்சேரி

தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு தரக்கோரும் குடியரசுத்தலைவருக்கான முறையீட்டு மனுவை புதுச்சேரி காங்கிரஸார் ராஜ்நிவாஸில் நேற்று அளித்தனர். தெலங்கானாவிலுள்ள ஆளுநர் தமிழிசை, காணொலியில் அவர்களுடன் உரையாடி, குடியரசுத் தலைவருக்கு அதை அனுப்புவதாக உறுதி அளித்தார்.

புதுச்சேரி காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர் நாராய ணசாமி, மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் ராஜ்நிவாஸுக்கு நேற்று சென்றனர். தற்போது புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை, தெலங்கானா ஆளுநராகவும் உள்ளதால், அவர் அங்கு சென்றுள்ளார்.

மனு அளிக்க வந்திருப்பதை அறிந்த ஆளுநர் தமிழிசை தெலங்கானாவில் இருந்தபடி காங்கிரஸாருடன் காணொலி மூலமாக கலந்துரையாடினார்.

தொடர்ந்து, குடியரசுத்தலை வருக்கு அனுப்புவதற்கான மனுவை ராஜ்நிவாஸில் காங்கிர ஸார் அளித்தனர். அம்மனுவை ஆளுநர் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி பெற்றுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து மனுவில் உள்ள விவரங்களை ஆளுநரிடம் காணொலி வாயிலாக எடுத்துரைத்த காங்கிரஸார், "தடுப்பூசி போடும் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு தர வேண்டும். மாநில அரசுகளின் மேல் நிதி சுமையை ஏற்றக்கூடாது" என்று குறிப்பிட்டனர்.

அவர்களிடம் துணைநிலை ஆளுநர் தமிழிசை, "இந்த மனுவை குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கிறேன். புதுச்சேரியில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. போதிய அளவு தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. தேவையான தடுப்பூசி வாங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது." என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x