Published : 04 Jun 2021 03:13 AM
Last Updated : 04 Jun 2021 03:13 AM

தமிழகத்தில் புதிதாக - 24,405 பேருக்கு கரோனா தொற்று ஒரே நாளில் 460 பேர் உயிரிழப்பு : சிகிச்சையில் 2.80 லட்சம் பேர் உள்ளனர்

தமிழகத்தில் 24,405 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 460 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் 2 லட்சத்து80,426 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது:

தமிழகத்தில் நேற்று 13,448 ஆண்கள், 10,957 பெண்கள் எனமொத்தம் 24,405 பேர் கரோனாவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில், அதிகபட்சமாக கோவையில் 2,980, சென்னையில் 2,062 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 21 லட்சத்து72 ஆயிரத்து 751 ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 5 லட்சத்து 11 ஆயிரத்து 258 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

18.66 லட்சம் பேர் குணம்

இதுவரை சென்னையில் 4 லட்சத்து 75 ஆயிரத்து 781 பேர் உட்படதமிழகம் முழுவதும் மொத்தம் 18 லட்சத்து 66 ஆயிரத்து 660 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 3,595, கோவையில் 4,546 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 32,221 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

உயிரிழப்பு 25,665 ஆக உயர்வு

சென்னையில் 28,186, கோவையில் 37,505 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 2 லட்சத்து80,426 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று ஒரே நாளில் முதியவர்கள் உட்பட 460 பேர்உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25,665ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 7,291 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு, தனியார் ஆய்வகங்களில் இதுவரை 2 கோடியே 75 லட்சத்து 36 ஆயிரத்து 393 பேருக்கு பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 1 லட்சத்து 68 ஆயிரத்து 698 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x