Published : 04 Jun 2021 03:14 AM
Last Updated : 04 Jun 2021 03:14 AM
செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை மத்திய அரசு ஆராய்ந்து முடிவு எடுக்கும் என நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்தனர்
செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தில் கரோனாவுக்கான தடுப்பூசி மருந்து உற்பத்தியை உடனடியாக தொடங்க உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த வெர்னிகா மேரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள், செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தை உடனடியாக திறக்க வலியுறுத்தி தமிழக முதல்வர், பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோர முடியாது.
மாநில அரசு விடுத்துள்ள கோரிக்கையை பரிசீலித்து தகுந்த முடிவெடுக்க மத்திய அரசுக்கு போதிய அவகாசம் வழங்க வேண்டும்.
தற்போதுள்ள இக்கட்டான சூழலில் இந்த தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை மத்திய அரசு ஆராய்ந்து முடிவு எடுக்கும் என நம்பிக்கை தெரிவித்த நீதிபதிகள், தற்போதுள்ள சூழலில் இதுதொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT